சிங்கப்பூரில் தன் 12 வயது மகனைத் தாக்கிய 48 வயது தந்தைக்கு சிறைத்தண்டனை!
சிங்கப்பூரில் தனது 12 வயது மகனைத் தாக்கியதற்காக 48 வயதுடைய நபருக்கு இரண்டரை மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தனது மகனை வீட்டிற்கு அழைத்து வராத முன்னாள் மனைவி மீது ஏற்பட்ட கோபத்தில், சமையல் பாத்திரத்தால் மகனைத் தாக்கி, பின்னர் பேஸ்பால் மட்டையால் மிரட்டியுள்ளார்.
இந்த சம்பவம் ரமலான் மாத நோன்பு திறக்கும் நிகழ்விற்காக அழைப்பு விடுத்திருந்த தந்தையின் வீட்டிற்கு மகன் தனியாக சென்றபோது நடந்துள்ளது.
ஆத்திரமடைந்த தந்தை, உணவு மேஜையை கவிழ்த்து, மகனை வசைபாடியுள்ளார். மேலும், சமையல் பாத்திரத்தால் அடித்ததில், மகனின் கை, முதுகு மற்றும் மார்பு ஆகிய இடங்களில் காயங்கள் ஏற்பட்டன.
பேஸ்பால் மட்டையால் அடித்துக் கொல்வதாகவும் மிரட்டியுள்ளார்.
எப்படியோ தப்பிய மகன், நடந்தவற்றை தன் அண்ணனிடம் தெரிவிக்க, அவர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
வீட்டிற்கு வந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே நுழைந்து குற்றம் சாட்டப்பட்ட நபரைக் கைது செய்தனர்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மகனுக்கு மூன்று நாட்கள் விடுப்பு வழங்கப்பட்டு வீடு திரும்பியுள்ளார்.