சிங்கப்பூர் சுற்றுலாத்துறையை மேம்படுத்த $300 மில்லியன் நிதி உதவி!

0

சிங்கப்பூர் தனது சுற்றுலாத்துறையை வலுப்படுத்தும் நோக்கில் கணிசமான $300 மில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளது. உள்ளூர் பொருளாதாரத்தை உயர்த்தும் இலக்குடனும், உலகளாவிய வர்த்தக மையமாக தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவும் இந்த முன்னெடுப்பு அமைந்துள்ளது. இத்திட்டம் பற்றி வர்த்தக மற்றும் தொழில் துறை இணையமைச்சர் அல்வின் டான் நாடாளுமன்றத்தில் மார்ச் 1 ஆம் தேதி அறிவித்தார். புதிய சுற்றுலா அம்சங்களை உருவாக்கி விளம்பரப்படுத்துவது, உள்ளூர் வணிகங்களை புதுமையான திட்டங்களை உருவாக்க ஊக்குவிப்பது ஆகியவற்றில் இந்த முதலீடு கவனம் செலுத்தும்.

சுற்றுலா மேம்பாட்டு நிதியத்தின் நான்காவது கட்டத்தில் (Tourism Development Fund 4) வழங்கப்படும் இந்த உதவியானது புதிய ஈர்ப்புகளை உருவாக்குவதற்கு மட்டுமின்றிக், இருக்கும் வசதிகளை புதுப்பிக்கவும், சுற்றுலாத்துறை தொழிலாளர்களின் திறன்களை மேம்படுத்தவும், உள்ளூர் சுற்றுலா நிறுவனங்களில் புத்தாக்கத்திற்கு வழிவகுக்கவும் பயன்படும். இந்த நிதியுதவி மூலம் சமீபத்தில் ஆதரிக்கப்பட்ட திட்டங்களில், பனி, அலைச்சறுக்கு, ஸ்கேட்டிங் ஆகியவற்றை வழங்கும் தனித்துவமான “Trifecta” ஈர்ப்பும், டிஸ்னி குரூஸ் லைனின் சமீபத்திய கப்பலான டிஸ்னி அட்வென்ச்சர் சிங்கப்பூரில் தன் பிரத்தியேக துறைமுகத்தை 2025 முதல் அமைப்பதும் அடங்கும்.

தன்னை சர்வதேச கவனத்தின் மையத்தில் வைத்திருப்பதற்கான சிங்கப்பூரின் உத்தியில், புதிய தரமான அனுபவங்களை வழங்குவதுடன், ஏற்கனவே உள்ள வசதிகளை மேம்படுத்தும் திட்டமும் அடங்குகிறது. ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசா மற்றும் சென்டோசா கடற்கரைகளை இணைக்கும் ‘சென்சாரிஸ்கேப்’ என்ற புதிய தரிசனம், சிங்கப்பூர் கடல் உலக விரிவாக்கம் ஆகியவை பல்வேறு விதமான அனுபவங்களை சுற்றுலா பயணிகளுக்கு வழங்கும் சிங்கப்பூரின் முனைப்பை பறைசாற்றுகின்றன. 2024 ஆம் ஆண்டில் 15 முதல் 16 மில்லியன் சர்வதேச பார்வையாளர்களை ஈர்க்கும் இலக்குடன் இந்த நடவடிக்கைகள் கைகோர்க்கின்றன. இது நாட்டின் சுற்றுலா வருவாய்க்கு கணிசமாக பங்களிக்கும்.

சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி, பொருளாதார வலிமையையும் உயிரோட்டத்தையும் உறுதி செய்வதற்காக வர்த்தக முயற்சிகளையும் சிங்கப்பூர் இரட்டிப்பாக்குகிறது. வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் கான் கிம் யாங், பொருளாதாரத்தை வளர்ப்பது, வளங்களை கண்டறிந்து பயன்படுத்துவது, வணிகங்களை மாற்றியமைப்பது, உலகளாவிய தொடர்புகளை வலுப்படுத்துவது போன்ற உத்திகளின் முக்கியத்துவத்தை நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்தார். வர்த்தக வலையமைப்புகளை திறம்பட பயன்படுத்துதல், முதலீட்டை ஊக்குவித்தல், புதிய தொழில்நுட்பங்களை செயல்படுத்துதல் ஆகியவை நிலையான பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்யும்.

வலுவான உள்கட்டமைப்பு, வணிகம் செழிக்க உதவும் கொள்கைகள் மற்றும் திறமையான தொழிலாளர்கள் ஆகிய சாதகங்கள் காரணமாக சிங்கப்பூர் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை தொடர்ந்து ஈர்த்து வருகிறது. சமீபத்திய ஆண்டுகளில் இதில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காணப்பட்டுள்ளது. பொருளாதார நெகிழ்வுத்தன்மையை மேலும் துரிதப்படுத்த, உற்பத்தித் துறையில் செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையத் திட்டம், கடல் மற்றும் கடல்சார் பொறியியல் ஆதரவுத் திட்டம் போன்ற முன்னெடுப்புகள் உற்பத்தித்திறன், போட்டித்தன்மை மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றை அதிகரிக்கும். உலகளாவிய வணிக தலைவர்கள் திட்டம் (Global Business Leaders Programme) போன்ற கூட்டு முயற்சிகள் சிங்கப்பூரின் திறமைகளை வளர்த்தெடுத்து, நிறுவனங்களின் பிராந்தியமயமாக்கல் முயற்சிகளுக்கு உதவும்.

புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்துவது, ஒரு ஆக்கப்பூர்வமான, புத்தாக்கம் நிறைந்த, போட்டித்தன்மை மிக்க வணிக சூழலை ஊக்குவிப்பது ஆகியவை சிங்கப்பூரின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதில் முன்னுரிமையாக உள்ளன. நாட்டின் நிலையான பொருளாதார வளர்ச்சியையும் செழிப்பையும் உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் தீவிர நடவடிக்கைகள் மற்றும் தொலைநோக்கு முதலீடுகள் மிகத் தெளிவாகத் தெரிகின்றன.

Leave A Reply

Your email address will not be published.