சீலட்டார் சாலையில் வேன்- டிப்பர் லாரி மோதி விபத்து 35 வயது வேன் ஓட்டுநர் உயிரிழப்பு!
சிங்கப்பூர்: ஜூலை 6ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை சுமார் 10.05 மணியளவில், சீலட்டார் வெஸ்ட் லிங்க் சாலையில் யீஷூன் அவென்யூ 1 நோக்கிச் சென்ற வேன் ஒன்று டிப்பர் லாரியுடன் மோதி ஏற்பட்ட சாலை விபத்தில், 35 வயதுடைய ஆண் ஓட்டுநர் உயிரிழந்தார்.
சிங்கப்பூர் காவல்துறையினருக்கும், சிவில் பாதுகாப்புப் படையினருக்கும் விபத்து தொடர்பான தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மருத்துவர்கள் அந்த ஆணை பரிசோதித்தபோது, அவர் இறந்துவிட்டது உறுதிப்படுத்தப்பட்டது.
சம்பவ இடத்திலிருந்து பகிரப்பட்ட புகைப்படங்களிலும் டாஷ்கேம் காட்சிகளிலும், மோதி சேதமடைந்த வேனின் கதவுகள் திறந்த நிலையில் இருந்ததோடு, அதன் உள்ளிருந்து சில பொருட்கள் சாலையில் சிதறிய நிலையில் காணப்பட்டது. அந்த வேன், ஒரு டிப்பர் லாரியின் பின்னால் மோதியதாகக் கூறப்படுகிறது. போலீசார் சம்பவ இடத்தில் ஒரு நீல குடையை அமைத்து தடயங்களை சேகரித்தனர்.
விபத்து காரணமாக குறைந்தது இரண்டு சாலை வழித்தடங்கள் மூடப்பட்டன. இதனால் சாலைப் பகுதிகளில் சுமார் மூன்று மணி நேரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் மற்றும் மீட்புக்குழு வாகனங்கள் அந்த இடத்தில் காணப்பட்டன.
இவ்விபத்து தொடர்பாக போலீசார் தொடர்ந்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.