சட்டவிரோத மின்சிகரெட்டுகள் கடத்தல் முயற்சி முறியடிப்பு துவாஸ் சோதனைச் சாவடியில் 2,400 ‘வேப்’ கருவிகள் பறிமுதல்!
ஜூலை 29 அன்று, துவாஸ் சோதனைச் சாவடியில் அதிகாரிகள், மலேசியாவிலிருந்து வந்த லொறி ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர். கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் செல்வதாகக் கூறப்பட்ட அந்த லொறியில், சுமார் 2,400 சட்டவிரோத ‘வேப்’ கருவிகளும் அதன் பாகங்களும் சிங்கப்பூருக்குள் ரகசியமாகக் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடி ஆணைய (ICA) அதிகாரிகள் இந்த லொறியைத் தீவிரமாகச் சோதனையிட்டனர். அப்போது, லொறியின் டிரெய்லர் மீது வைக்கப்பட்டிருந்த ஒரு மூடிய பெட்டிக்குள் இந்தப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இந்த வழக்கு, மேலதிக விசாரணைக்காக சுகாதார அறிவியல் ஆணையத்திடம் (HSA) ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் ‘வேப்’ எனப்படும் மின்னணு சிகரெட்டுகளைப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என சுகாதார அறிவியல் ஆணையம் பொதுமக்களுக்கு நினைவூட்டியுள்ளது.
இது தொடர்பான குற்றச்செயல்கள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க விரும்பினால், www.go.gov.sg/reportvape என்ற பிரத்தியேக இணையப் பக்கத்தைப் பயன்படுத்தலாம். அல்லது, பொது விடுமுறை நாட்கள் உட்பட தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும் உதவி எண்ணை அழைக்கலாம்.