சிங்கப்பூரில் Kpod ‘ஸோம்பி வேப்களை தயாரித்த நபருக்கு 16 மாதங்கள் சிறை!
சட்டவிரோதமாக ‘கேபாட்’ (Kpod) ஸோம்பி வேப்களைத் தயாரித்ததற்காக, 41 வயது சிங்கப்பூரரான முகமது அகில் அப்துல் ரஹீம் என்பவருக்கு 16 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றத்திற்காகத் தண்டிக்கப்படும் முதல் சிங்கப்பூரர் இவர்தான்.
அவர் மீது மொத்தம் எட்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவற்றில், மின்-சிகரெட்டுகள் தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகளையும், கடவுச்சீட்டுக்கு (passport) விண்ணப்பித்தபோது தவறான தகவல் கொடுத்த குற்றச்சாட்டையும் அவர் ஒப்புக்கொண்டார். தண்டனை வழங்கும்போது, நீதிமன்றம் அவரது மற்ற நான்கு குற்றச்சாட்டுகளையும் கருத்தில் எடுத்துக்கொண்டது.
விசாரணையில், சிங்கப்பூர் வாடிக்கையாளர்களுக்காக இந்த வேப்களைத் தயாரிக்க, அவர் மலேசியாவின் ஜோகூர் பாருவில் வேலையில் அமர்த்தப்பட்டது தெரியவந்தது.
ஒரு வேப் தயாரிப்பதற்கு சுமார் 10 வெள்ளி சம்பளமாகப் பெற்ற அவர், மொத்தம் 200 வேப்களைத் தயாரித்துள்ளார். அவர் அனுப்பிய விநியோகப் பொதி ஒன்றில் மின்-சிகரெட்டுகள் இருப்பதை விநியோக ஊழியர் ஒருவர் கண்டுபிடித்ததை அடுத்து, இந்தக் குற்றம் வெளிச்சத்திற்கு வந்தது.