யீஷூனில் சத்தத் தகராறு கொலையில் முடிந்தால் 66 வயது முதியவர் மீது கொலைக் குற்றச்சாட்டு!
சிங்கப்பூர், யீஷூனில் சத்தம் போடுவது தொடர்பாக ஏற்பட்ட ஒரு சிறிய தகராறு, கொடூரமான கொலையில் முடிந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 66 வயது முதியவர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
செப்டம்பர் 24 அன்று யீஷூன் சென்ட்ரல், புளோக் 323-இன் ஆறாவது மாடியில் நடந்த இந்த மோதலில் மூன்று பேர் காயமடைந்தனர்.
நடந்தது என்ன?
கோ ஆ ஹ்வீ என்ற அந்த 66 வயது முதியவர், வியட்நாம் நாட்டைச் சேர்ந்த 30 வயது பெண்ணான குயென் ஃபுவோங் ட்ரா என்பவரை கத்தியால் நெஞ்சில் குத்தியதாகக் கூறப்படுகிறது. சுயநினைவின்றி உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தத் தாக்குதலைத் தடுக்க முயன்ற அப்பெண்ணின் கணவருக்கும் காயம் ஏற்பட்டது. தாக்குதலில் தானும் காயமடைந்த கோ, மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போதே அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்தக் கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், கோ-வுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம். இந்த வழக்கு மீண்டும் அக்டோபர் 2-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.