பான்-ஐலண்ட் விரைவுச்சாலையில் பேருந்து மோட்டார் சைக்கிள் விபத்தில் 30 வயது பெண் பரிதாப பலி!
சிங்கப்பூரில் அக்டோபர் 9 அன்று நடந்த ஒரு துயரச் சம்பவத்தில், 30 வயது பெண் ஒருவர் பேருந்துடன் மோதி ஏற்பட்ட விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். சாங்கியை நோக்கிச் செல்லும் பான்-ஐலண்ட் விரைவுச்சாலையில் (PIE), பெடோக் ரிசர்வாயர் சாலைக்கு அருகே மாலை 5 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்து நடந்தபோது அப்பெண் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து SBS Transit நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அவர்களுடைய பேருந்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின்படி, அந்தப் பெண் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறிக் கீழே விழுந்துள்ளது. அப்போது, பின்னால் வந்த பேருந்தின் ஓட்டுநர் உடனடியாக வண்டியை நிறுத்த முயன்றுள்ளார். ஆனால், அதற்குள் விபத்து நடந்துவிட்டது.
தங்களிடம் உள்ள சிசிடிவி காணொளியை காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளதாகவும், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் SBS Transit நிறுவனம் கூறியுள்ளது.
இணையத்தில் பரவும் காணொளி
இதற்கிடையில், இந்த விபத்து தொடர்பான ஒரு காணொளி இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. சாலையில் செல்லும் மற்றொரு காரில் இருந்த கேமராவில் பதிவான அந்தக் காட்சியில், பேருந்திற்கு முன்னால் ஆரஞ்சு நிற ஸ்கூட்டர் ஒன்று சாலையில் விழுந்து கிடப்பது தெரிகிறது.
இந்த விபத்துதொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.