ஆங் மோ கியோவில் சாலை விபத்து 59 வயது நபர் உயிரிழப்பு கார் ஓட்டுநர் கைது!
ஜனவரி 19 இரவு, ஆங் மோ கியோ பகுதியில் நடந்த சாலை விபத்தில் 59 வயதுடைய நபர் உயிரிழந்தார். இந்த விபத்து இரவு சுமார் 8.30 மணிக்கு, ஆங் மோ கியோ அவென்யூ 3-இல் உள்ள ப்ளாக் 231 அருகே நடந்தது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையும் சிங்கப்பூர் குடிமை பாதுகாப்புப் படையும் தகவல் பெற்றன. கார் மற்றும் பாதசாரி மோதிய இந்த விபத்தில், அந்த நபர் மயக்க நிலையில் டான் டாக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்த விபத்தில் தொடர்புடைய 50 வயதுடைய கார் ஓட்டுநர், உயிரிழப்பிற்கு காரணமான ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தியதற்காக கைது செய்யப்பட்டார். சமூக ஊடகங்களில் வெளியான காணொளிகளில், ப்ளாக் 231 மற்றும் 230 இடையிலான பகுதி அடைக்கப்பட்டிருந்ததும், நடைபாதையில் உடைந்த துண்டுகள் சிதறிக் கிடந்தும் காணப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.