Choa Chu Kang HDB அடுக்குமாடி கட்டிடத்தின் 14-ஆவதுமாடியில்தீ விபத்து, 4 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்!
மே 31 ஆம் தேதி பிற்பகலில், சோவா சூ காங் அவென்யூ 4-இல் உள்ள பிளாக் 439 கட்டிடத்தின் 14-ஆவது மாடியில் அமைந்திருந்த ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. பிற்பகல் 1.20 மணியளவில் தீ விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன், சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படையினர் உடனடியாக தீயணைப்பு வீரர்களை சம்பவ இடத்துக்கு அனுப்பினர்.
அவர்கள் அங்கு சென்றபோது, வீட்டின் வரவேற்பு அறை முழுவதும் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. இரண்டு நீர் குழாய்களின் உதவியுடன் தீ விரைவாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. எனினும், கடும் வெப்பம் மற்றும் புகை காரணமாக அந்த வீடு பெருமளவில் சேதமடைந்தது. கட்டிடத்தில் வசித்த நான்கு பேர் புகையால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதா என பரிசோதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமையல் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும் என்றும், மின்சாதனங்களை கவனிக்காமல் விடக் கூடாது என்றும் சிவில் பாதுகாப்புப் படையினர் பொதுமக்களுக்கு நினைவூட்டியுள்ளனர். மேலும், ஒரே மின் இணைப்பில் அதிக சாதனங்களை இணைப்பதைத் தவிர்க்கவும், மின்னணு சாதனங்களை இரவு முழுவதும் மின்சாரத்தில் இணைத்து வைக்காமல் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எரியும் பொருட்களை குப்பையில் போடுவதற்கு முன் அவை முழுமையாக அணைந்துள்ளனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.