யிஷுன் HDB குடியிருப்பு வீட்டில் கழிப்பறை கூரையின் கான்கிரீட் சரிந்து விழுந்ததில் 65 வயதுடைய நபர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்!
ஜூன் 19 அதிகாலை யிஷூனில் உள்ள HDB குடியிருப்பில், கழிவறையின் மேல் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் 65 வயதான திரு மொஹமட் ஹாஷிம் அர்ஷாத் படுகாயம் அடைந்தார்.
காலை தொழுகைக்கு தயார் செய்துகொண்டிருந்தபோது மேல் சிமெண்ட் சுவர் உடைந்து அவர் மீது விழுந்தது. தலை, தோள் மற்றும் மண்டையில் காயம் ஏற்பட்ட அவர், 10-க்கும் மேற்பட்ட தையல்கள் போட்டுக் கொண்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அடுத்த நாள் மாலை வீடு திரும்பினார். இந்த சம்பவம் அவரை மனதளவில் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக அவரது மகள் தெரிவித்துள்ளார்.
இந்த வீடு 41 ஆண்டுகளாக பழமை வாய்ந்தது என்றும், 2018ஆம் ஆண்டு கடைசியாக மேம்படுத்தப்பட்டதாகவும் வீடமைப்பு வாரியம் (HDB) தெரிவித்தது.
சம்பவத்தைத் தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வில், சமையலறை கழிவறை சுவரிலும் சிறிதளவு வீங்கிய சிமெண்ட் பகுதி கண்டுபிடிக்கப்பட்டது. விழும் அபாயம் இல்லை என்றாலும், பாதுகாப்புக்காக அந்த பகுதிகளை அகற்றும் பணிகள் வரும் வாரம் தொடங்கவுள்ளது. இது ‘Goodwill Repair Assistance’ திட்டத்தின் கீழ் செய்யப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் பழுது பார்ப்புக்கான செலவின் 50% HDB ஏற்கும்.
உள்துறை அமைச்சர் திரு கே. ஷண்முகம், சம்பவத்துக்குப் பின்னர் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நலமறிந்தார். பழுது செய்வதற்கான செலவுகளுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்றும், குடும்பத்திற்கு தேவையான பிற உதவிகளும் அரசு தரப்பில் ஒத்துழைக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
மேலும் HDB, பழமையான குடியிருப்புகளில், குறிப்பாக குளியல் மற்றும் சமையலறைகளில் சுவர் சேதங்களை சரியான பராமரிப்பின் மூலம் தவிர்க்கலாம் எனவும், குடியிருப்பாளர்கள் நேரத்துக்குள் பழுதுகளை சீரமைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.