சாங்கி முனையம் 5 சிங்கப்பூரர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் பிரதமர் வோங் அடிக்கல் நாட்டு விழாவில் தெரிவிப்பு!
சிங்கப்பூரின் விமானத் துறை வளர்ச்சியில் ஒரு புதிய மைல்கல்லாகக் கருதப்படும் சாங்கி விமான நிலையத்தின் ஐந்தாம் முனையம் 5 2030களின் நடுப்பகுதியில் திறக்கப்படவுள்ளது. மே 14 ஆம் தேதி நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் லாரன்ஸ் வோங், இது “தைரியமான நடவடிக்கை” எனக் குறிப்பிடதோடு, நாட்டின் நீண்டகால எதிர்கால வளர்ச்சியை முன்வைக்கும் திட்டமாகும் என்றும் கூறினார்.
போட்டித்தன்மையை வலுப்படுத்தும் மேம்பாடு
5 முனையம், தற்போதைய அனைத்து முனையங்களையும் விட பரப்பளவிலும் செயல்திறனிலும் பெரிதாக இருக்கும். ஆண்டுதோறும் 50 மில்லியன் பயணிகளைச் செயலாக்கும் திறன் கொண்ட இந்த முனையம், சிங்கப்பூரின் மொத்த சாங்கி விமான நிலைய திறனை 140 மில்லியனாக உயர்த்தும். தற்போது சிங்கப்பூர் சுமார் 170 நகரங்களுடன் இணைக்கப்பட்டிருக்க, முனையம் 5 மூலமாக இந்த எண்ணிக்கை 200க்கும் அதிகமாகும்.
தொழில்நுட்பம், வேலைவாய்ப்பு, பசுமை வளர்ச்சி
முனையம் 5, சிங்கப்பூரின் சுங்கி ஈஸ்ட் மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதில் சிங்கப்பூரர்கள் பெரும் அளவில் வேலைவாய்ப்புகளை பெறுவர். குறிப்பாக தரவுத்தொழில்நுட்பம், இயந்திரவியல், ரோபாட்டிக்ஸ் மற்றும் நிலைத்தன்மை தொழில்களில் திறமைகள் தேவைப்படும்.
மேலும், முனையம் 5 பசுமை தொழில்நுட்பங்களால் வடிவமைக்கப்படுகிறது. சூரியவொளி சக்தியைப் பயன்படுத்தும் திட்டம், குறைந்த கார்பன் உமிழ்வு, அதிகமான ஆற்றல் செயல்திறன் உள்ளிட்ட அம்சங்கள் முனையம் 5-இன் மையக் கொள்கைகளாக உள்ளன. இது சிங்கப்பூரின் மிகப்பெரிய கூரை அமைப்பாக உருவாகும்.
வலுவான இணைப்புத்திறன்
பயணிகள் அனுபவத்தை மேம்படுத்த, தானியக்க வசதிகள், சிறந்த இணைப்புத்திறன்கள் உள்ளிட்ட பல அம்சங்கள் அமல்படுத்தப்படுகின்றன. தாம்சன் – ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதை முனையம் 5ஐ நகரத்தின் மையத்துடன் நேரடியாக இணைக்கும். இது ஜோகூருடன் இணைக்கும் விரைவு ரயில் பாதையுடனும் தொடர்பு பெறும். கூடுதலாக, அருகிலுள்ள தானா மேரா படகு நிலையம் கடல் போக்குவரத்தையும் இணைக்கும்.
தொலைநோக்கு பார்வை – வெற்றியின் சக்தி
பிரதமர் வோங், சிங்கப்பூர் முன்னோடிகள் எடுத்த துணிச்சலான முடிவுகளைக் குறிப்பிட்டார். 1970களில் சிங்கப்பூர், பயா லெபாரிலிருந்து சாங்கிக்கு விமான நிலையத்தை மாற்றியபோது பலர் சந்தேகித்தாலும், அதே ஒழுங்கு, அதே தொலைநோக்கு பார்வை இன்றும் தொடர்கிறது என்றார்.
விமான நிலையத்தின் வளர்ச்சி, சிங்கப்பூரை உலகத்துடன் இணைத்து, சுற்றுலா, தளவாடங்கள், விண்வெளி போன்ற துறைகளில் வளர்ச்சியை உறுதி செய்துள்ளது. விமானத் துறை தற்போது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5% பங்களிக்கிறது.
சிங்கப்பூரின் உலகளாவிய முகம்
ஸ்கைட்ராக்ஸ் நிறுவனம் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தை 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த விமான நிலையமாகத் தெரிவு செய்தது. இது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், சாட்ஸ் போன்ற நிறுவனங்களையும் உலகளாவியமாக உயர்த்தியதற்கான அடையாளமாகும்.
“சிங்கப்பூரின் வெற்றிக்குப் பின்னால் ஒரு திறமையான, அர்ப்பணிப்பு மற்றும் மீள்தன்மை கொண்ட விமானத் தொழிலாளர் சமூகம் உள்ளது. சாங்கியின் வெற்றிக்குப் பின்னிலிருக்கும் ரகசியம் அதுவே,” என பிரதமர் வோங் உரையாற்றினார்.
இந்த திட்டம், சிங்கப்பூரின் வளர்ச்சி பாதையில் ஒரு மிக முக்கியமான அத்தியாயமாக மாறும் என்பதில் அரசாங்கம் உறுதியுடன் உள்ளது.