சிங்கப்பூர்-மலேசியா இடையே சட்ட விரோத கார் ஓட்டுநர்கள்நால்வர் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்!

0

சிங்கப்பூர்-மலேசியா இடையே அனுமதி இல்லாமல் கார் ஓட்டி பயணிகள் அழைத்துச் சென்ற நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து ஆணையம் (LTA) தனது பேஸ்புக் பக்கத்தில் கடந்த வாரம் இந்த செய்தியை பகிர்ந்துள்ளது. துல்லியமான தேதி குறிப்பிடப்படவில்லை என்றாலும், சமீபத்திய சோதனை நடவடிக்கையில் இந்த குற்றவாளிகள் பிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பகிரப்பட்ட படங்களில் பல பயணிகள் அமரக்கூடிய வாகனங்கள் (MPVs) போக்குவரத்து ஆணைய அதிகாரிகளால் நிறுத்தி பரிசோதனை செய்யப்படுவதும், சில வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதையும் காண முடிந்தது.

போக்குவரத்து ஆணைய விதிமுறைகளின்படி, பயணிகளை எல்லை தாண்டி அழைத்துச் செல்ல வணிக ரீதியாக வாகனங்களுக்கு “பொது சேவை வாகன லைசென்ஸ் (PSVL)” தேவை. இதைக் கடைபிடிக்கத் தவறினால், விபத்து ஏற்பட்டால், பயணிகளுக்கு போதுமான காப்பீடு கிடைக்காமல் போகலாம். இதுபோன்ற குற்றங்களுக்கு அதிகபட்சம் $3,000 அபராதம், 6 மாதங்கள் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். மேலும், வாகனம் பறிமுதல் செய்யப்படலாம் என்றும் விதிமுறைகள் தெரிவிக்கின்றன.

போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு. சு ஹோங் தாட் இந்த விஷயத்தில் தலையிட்டு, போக்குவரத்து ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரகசிய நடவடிக்கைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், சட்டத்தை மீறுபவர்கள் தங்களை அறியாமல் போக்குவரத்து ஆணைய அதிகாரிகளை பயணிகளாக ஏற்றிச் செல்லக்கூடும் என்றும் எச்சரித்தார்.

அதேபோல், சிங்கப்பூர் பயணிகளை குறிவைத்து எல்லை தாண்டி பயண சேவைகளை வழங்கும் 10 க்கும் மேற்பட்ட இணையதளங்கள் மற்றும் ஆன்லைன் சந்தைகளைக் கண்டறிந்ததாக ஸ்ட்ரைட்ஸ் டைம்ஸ் பத்திரிகை தெரிவிக்கிறது. சில வலைத்தளங்கள் காப்பீடு உள்ளதாகக் குறிப்பிடித்தாலும், எந்த இணையதளமும் தேவையான லைசென்ஸ் இருப்பதாகக் கூறவில்லை.

2019 ஆம் ஆண்டில், சட்டவிரோதமாக வெளிநாட்டு பதிவு எண் கொண்ட வாகனங்களில் பயணிகள் அழைத்துச் சென்றமைக்கு நான்கு ஓட்டுநர்களுக்கு தலா $1,400 அபராதம் விதிக்கப்பட்டது. அப்போது மூன்று வாகனங்கள் போக்குவரத்து ஆணையத்தால் பறிமுதல் செய்யப்பட்டது. மீதமுள்ள வாகனத்தை பறிமுதல் செய்ய நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.