சிங்கப்பூரில் வேகத்தை கட்டுப்படுத்த சிவப்பு விளக்கு கேமராக்கள்!
சிங்கப்பூரில், சிவப்பு விளக்கு மீறல்களைக் கண்டறியும் கேமராக்களில், வேகத்தைக் கட்டுப்படுத்தும் அம்சங்களை காவல்துறை பயன்படுத்தத் தயாராகி வருகிறது. விபத்துக்கு அதிக வாய்ப்புள்ள இடங்களில் வேகமாக வாகனம் ஓட்டுவதை இது தடுக்கும். பொதுவாக, சிவப்பு விளக்குகளை மீறுபவர்களை அடையாளம் காணப் பயன்படும் இந்த கேமராக்கள் ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறங்களில் இருப்பதால் அவற்றை எளிதில் அறியலாம். நிலையான வேகக் கண்காணிப்புக் கேமராக்கள் இல்லாத பகுதிகளில் இந்தக் கேமராக்கள் வைக்கப்படும், மேலும் சாலைகளின் வேக வரம்பைக் குறிக்கும் அறிவிப்பு பலகைகளும் இருக்கும்.
2023 ஆம் ஆண்டில் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் விபத்துகளும் சாலைப் போக்குவரத்து மரணங்களும் அதிகரித்ததை அடுத்து, கேமராக்களில் வேக அமலாக்கத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு, கடந்த ஆண்டுதான் அதிக அளவு சாலை விபத்து மரணங்கள் நிகழ்ந்துள்ளன. 2022 உடன் ஒப்பிடுகையில் போக்குவரத்து மரணங்கள் 25.9% அதிகரித்து, மொத்தம் 136 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் வயதானவர்களே பெரும்பாலும் சாலை விபத்துக்களில் பலியாகின்றனர். சிவப்பு விளக்கு மீறல்கள் குறைந்திருந்தாலும், இதுபோன்ற மீறல்களால் ஏற்படும் விபத்து மரணங்கள் அதிகரித்துள்ளன. மேலும், வேக வரம்புகளை மீறி விபத்தை ஏற்படுத்தும் சம்பவங்களும் அதிகம் நிகழ்கின்றன.
போக்குவரத்து கேமராக்களால் கண்டறியப்பட்ட வேக மீறல்கள் குறைந்திருந்தாலும், காவல்துறையின் பிற நடவடிக்கைகளில், 2023ல் அதிக மீறல்கள் கட்டப்பட்டுள்ளன. குறைவான கண்காணிப்பு இருப்பதாக நினைக்கும் இடங்களில் வாகன ஓட்டிகள் அதிக வேகத்தில் செல்வதை இது காட்டுகிறது. இந்தப் போக்குகள் குறித்து காவல்துறை கவலை தெரிவித்துள்ளது. கவனக்குறைவு, வாகனத்தை முறையாக கட்டுப்படுத்தாதது, அஜாக்கிரதையாக வழி மாறுதல் ஆகிய காரணிகளே அதிக விபத்துகள் ஏற்பட காரணம் என்று காவல்துறை சுட்டிக்காட்டுகிறது.