டெல்லியில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் ஏசி செயலிழப்பு 200 பயணிகள் அவதிப் பட்டு இறக்கப்பட்டனர்!
டெல்லியிலிருந்து சிங்கப்பூர் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் குளிர்சாதன வசதி (ஏசி) பழுதடைந்ததால், 200க்கும் மேற்பட்ட பயணிகள் விமானத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.
செப்டம்பர் 10ஆம் தேதி இரவு 11 மணிக்கு விமானம் புறப்படத் தயாராக இருந்த நிலையில், இந்த பிரச்சனை காரணமாகப் பயணிகள் சுமார் இரண்டு மணி நேரம் விமானத்திற்குள்ளேயே காத்திருந்தனர்.
ஏசி வேலை செய்யாததால், விமானத்தின் உள்ளே கடும் புழுக்கமும், வெப்பமும் ஏற்பட்டது. இதனால் அவதிப்பட்ட சில பயணிகள், கையில் கிடைத்த பேப்பர்களையும், பத்திரிக்கைகளையும் வைத்துத் தங்களுக்குத் தாங்களே விசிறிக்கொண்டனர்.
நீண்ட நேரக் காத்திருப்புக்குப் பிறகு, இறுதியாகப் பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டு, மீண்டும் முனையத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.
குளிர்சாதன அமைப்பில் ஏற்பட்ட கோளாறுதான் இந்த தாமதத்திற்குக் காரணம் என ஏர் இந்தியா நிறுவனம் பின்னர் விளக்கம் அளித்தது. விமான நிலைய ஊழியர்கள் பயணிகளுக்கு உணவு மற்றும் குளிர்பானங்களை வழங்கினர்.
அதன்பின், வேறு ஒரு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு, அதிகாலை 5:36 மணிக்கு விமானம் சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றது.