சிங்கப்பூரில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை இணையத்தில் ஒடுக்கும் நடவடிக்கை 272 பேர் கைது!

0

ஐந்து வாரங்கள் நீடித்த கூட்டு நடவடிக்கையில், சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவைச் சேர்ந்த அதிகாரிகள், இணையவழி குழந்தைகள் பாலியல் சுரண்டலில் ஈடுபட்டதாக 272 பேரைக் கைது செய்தனர்.

இதில் சிங்கப்பூரைச் சேர்ந்த 28 பேரும் அடங்குவர். குழந்தைகளை துன்புறுத்தும் படங்கள் மற்றும் காணொளிகளை வைத்திருத்தல், பரப்புதல், சிறுவர்களுடன் பாலியல் ரீதியான உரையாடல்களில் ஈடுபடுதல் போன்ற பல்வேறு குற்றங்களுக்காக சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இளையவர் 12 வயது சிறுவன், மூத்தவர் 73 வயது முதியவர்.

சிங்கப்பூர் காவல்துறையினர், பிற நாடுகளின் காவல்துறையுடன் இணைந்து, 236 இடங்களில் சோதனை நடத்தினர். சிங்கப்பூரில் 44 இடங்களில் இருந்து கணினிகள், கைபேசிகள் போன்ற மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டவர்களில் ஒன்பது பேர் மேலதிக மதிப்பீடு மற்றும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று வலியுறுத்திய சிங்கப்பூர் காவல்துறையின் உதவி ஆணையர் யியோ யீ சுவான், குழந்தைகளைப் பாதுகாக்க அதிகாரிகள் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.

குழந்தைகள் பாலியல் சுரண்டல் குற்றங்களுக்கு எதிரான போராட்டத்தில் சர்வதேச நாடுகளிடையே ஒற்றுமை முக்கியம் என்பதை ஹாங்காங் காவல்துறையின் மூத்த கண்காணிப்பாளர் ரேச்சல் ஹூயி வலியுறுத்தினார்.

இதே கருத்தை தென் கொரிய காவல்துறையும் எதிரொலித்தது. சிங்கப்பூரில் இதுபோன்ற குற்றங்களுக்கு கடுமையான சிறைத்தண்டனை, அபராதம் அல்லது பிரம்படி ஆகிய தண்டனைகள் வழங்கப்படும்.
image the straits times

Leave A Reply

Your email address will not be published.