செராங்கூன் நார்த் அடுக்குமாடி குடியிருப்பு 4-ல் 502வது வீட்டில் தீ நால்வர் மருத்துவமனையில் அனுமதி!

0

செப்டம்பர் 16ஆம் தேதி இரவு சுமார் 8 மணியளவில், செராங்கூன் நார்த் அவென்யூ 4-ல் உள்ள புளோக் 502-ல் ஒரு வீட்டில் திடீரென தீப்பிடித்தது. ஏழாவது மாடியில் உள்ள அந்த வீட்டின் படுக்கையறையில் தீ பரவத் தொடங்கியது.

தகவல் அறிந்து விரைந்து வந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் (SCDF), தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை முழுமையாக அணைத்தனர். மின்சாரக் கோளாறு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தீயணைப்புப் படையினர் வருவதற்கு முன்பே, அந்த வீட்டில் வசித்த மூன்று பேர் பத்திரமாக வெளியேறிவிட்டனர். அவர்களில் ஒருவருக்கு லேசான தீக்காயங்கள் ஏற்பட்டன.

மேலும், பக்கத்து வீட்டில் வசித்த ஒருவர் புகை காரணமாகப் பாதிக்கப்பட்டார். காயமடைந்த நால்வரும் சிகிச்சைக்காக சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பாதுகாப்பு கருதி, அந்த புளோக்கில் வசித்த சுமார் 50 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தை அடுத்து, பொதுமக்களுக்கு குடிமைத் தற்காப்புப் படை சில முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளது:

மின்சார சாதனங்களைப் பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும். ஒரே நேரத்தில் ஒரே பிளக்கில் பல சாதனங்களை இணைப்பதைத் தவிர்க்கவும்.

பயன்பாட்டில் இல்லாதபோது மின்சார சாதனங்களை அணைத்து வைக்கவும்.

சேதமடைந்த அல்லது பழைய வயர்களை உடனடியாக மாற்றவும்.

இரவு முழுவதும் செல்ஃபோன் போன்ற சாதனங்களை சார்ஜ் செய்வதைத் தவிர்க்கவும்.

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ‘சேஃப்டி மார்க்’ (Safety Mark) பாதுகாப்பு முத்திரை உள்ள சாதனங்களை மட்டுமே வாங்கிப் பயன்படுத்தவும்.

Leave A Reply

Your email address will not be published.