செப்டம்பர் இறுதியில் சிங்கப்பூரில் இடியுடன் கூடிய மழை எதிர்பார்ப்பு!
செப்டம்பர் 2025-இன் இரண்டாம் பாதியில், சிங்கப்பூரில் அடிக்கடி இடியுடன் கூடிய மழையும், பலத்த காற்றும் வீசும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறிப்பாக அதிகாலை மற்றும் விடியற்காலை நேரங்களில் இத்தகைய வானிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது நிலவி வரும் தென்மேற்குப் பருவமழையே இதற்குக் காரணம்.
சில நாட்களில், சுமத்ராவிலிருந்து வீசும் திடீர் புயல் காற்று காரணமாக, காலை வேளைகளில் கனமழையும் பலத்த காற்றும் இருக்கும்.
மதிய நேரங்களிலும் சில பகுதிகளில் குறுகிய நேரத்திற்கு இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் மழை இல்லாத நாட்கள் குறைவாகவே இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக, தீவின் பெரும்பாலான பகுதிகளில் மழையளவு சராசரியாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
தினசரி வெப்பநிலை 24°C முதல் 33°C வரை இருக்கும். சில நாட்களில் வெப்பம் 34°C-ஐ தாண்டக்கூடும். அடிக்கடி மழை பெய்தாலும், மாதம் முழுவதும் வெப்பமாகவும் ஈரப்பதத்துடனும் கூடிய சூழலே நிலவும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.