சிங்கப்பூரில் தடை செய்யப்பட்ட மெல்லும் புகையிலை கடத்த முயன்றமலேசிய ஆடவர் கைது!
சிங்கப்பூருக்குள் மெல்லும் புகையிலையைக் கடத்த முயன்ற கோபி தயாநிதி என்ற 38 வயது மலேசிய ஆடவர் ஒருவர் அதிகாரிகளிடம் பிடிபட்டுள்ளார்.
செப்டம்பர் 18 அன்று, வுட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் அவர் தனது லாரியில் வந்துகொண்டிருந்தபோது, ஸ்கேன் சோதனையில் அதிகாரிகளுக்குச் சந்தேகம் எழுந்துள்ளது.
இதையடுத்து, லாரியை நிறுத்தி அதிகாரிகள் மேலும் சோதனையிட்டபோது, ஓட்டுநர் அறையில் (கேபின்) மிகவும் தந்திரமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 3,450 மெல்லும் புகையிலைப் பொட்டலங்களைக் கண்டுபிடித்தனர்.
இந்தப் புகையிலையில் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய இரசாயனங்கள் இருப்பதால், சிங்கப்பூரில் இதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கோபி மீது செப்டம்பர் 19 அன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொள்ளப் போவதாகத் தெரிவித்துள்ளார். வழக்கின் அடுத்த விசாரணை அக்டோபர் 7 ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனையும், S$10,000 வரை அபராதமும் அல்லது இரண்டுமே விதிக்கப்பட வாய்ப்புள்ளது.