சிங்கப்பூரில் போதைப்பொருள் சோதனை 77 பேர் கைது, $74,000 மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

0

செப்டம்பர் 21 முதல் 26 வரை, மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (CNB) நாடு முழுவதும் ஒரு அதிரடி போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த நடவடிக்கையில், போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 77 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதிகாரிகள் நடத்திய இந்த சோதனையில் ஹெராயின், ‘ஐஸ்’ (Ice), கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றுடன், சுமார் $4,200 ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த மதிப்பு $74,000-க்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த அளவு, சுமார் 235 போதைக்கு அடிமையானவர்கள் ஒரு வாரம் வரை பயன்படுத்துவதற்குப் போதுமானது.

மொத்தமாக, சுமார் 351 கிராம் ஹெராயின், 99 கிராம் ‘ஐஸ்’, மற்றும் 69 கிராம் கஞ்சா ஆகியவை பிடிபட்டன.

இ-சிகரெட்டில் போதைப்பொருள்
இந்தச் சோதனையில் ‘எட்டோமிடேட்’ (etomidate) என்ற தீங்கு விளைவிக்கும் பொருள் கலந்திருப்பதாக நம்பப்படும் 527 இ-சிகரெட் குப்பிகளையும் (e-cigarette cartridges) அதிகாரிகள் கைப்பற்றினர்.

இவற்றில் 524 குப்பிகள், ஹவ்காங் பகுதி 51-ல் உள்ள ஒரு வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டன. அங்கு, 28 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து $3,500 ரொக்கப் பணமும் கைப்பற்றப்பட்டது.

அதே நாளில், புவாங்கோக் பகுதியில் 29 வயதுடைய மற்றொரு நபரையும் அதிகாரிகள் கைது செய்தனர். அவரைக் கைது செய்வதற்கு முன்பு, அவரது வீட்டிலிருந்து சில பொருட்கள் வெளியே வீசப்பட்டதை அதிகாரிகள் கண்டனர். அவை வேப் தொடர்பான பொருட்கள் என்றும், அவற்றில் ‘எட்டோமிடேட்’ கலந்த ஒரு இ-சிகரெட் குப்பியும் இருந்ததும் பின்னர் தெரியவந்தது.

இந்தச் சம்பவங்கள் குறித்து மேலதிக விசாரணைகள் இடம் பெறுகின்றன.

Leave A Reply

Your email address will not be published.