சிங்கப்பூரில் பூனை உரிமத் திட்டம் செப்டம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது!
செப்டம்பர் மாதம் முதல், சிங்கப்பூரில், அடுக்குமாடி குடியிருப்புகளில் (HDB) இரண்டு பூனைகளும், தனி வீடுகளில் மூன்று பூனைகளும் வளர்க்க அனுமதி வழங்கப்பட இருக்கிறது. ஆனால், எல்லா பூனைகளும் அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டு, அவற்றுக்கு ‘மைக்ரோசிப்’ (microchip) பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
செப்டம்பர் 1, 2024 முதல் ஆகஸ்ட் 31, 2026 வரையிலான இரண்டு வருட கால அவகாசத்தில், பூனை வளர்ப்பவர்கள் தங்கள் செல்லப் பிராணிகளை இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். இந்த அவகாச காலத்திற்குப் பிறகு, பதிவு கட்டணம் செலுத்த வேண்டும். கருத்தடை செய்யப்பட்ட பூனைக்கு வருடத்திற்கு $15-ம், கருத்தடை செய்யப்படாத பூனைக்கு $90-ம் கட்டணம் வசூலிக்கப்படும்.
பூனைகளின் எண்ணிக்கை கட்டுக்குள் வைத்திருக்க, அவற்றுக்கு கருத்தடை செய்வது நல்லது. கருத்தடை செய்யப்பட்ட பூனைகளை அவகாச காலத்திற்குள் பதிவு செய்தால், அந்த உரிமம் (license) வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும். கருத்தடை செய்யப்படாத பூனைகளுக்கு, உரிமம் இந்த அவகாச காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும்.
மேலும், செப்டம்பர் 1-ம் தேதி முதல், குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களுக்கு, இலவசமாக கருத்தடை மற்றும் ‘மைக்ரோசிப்’ சேவைகள் வழங்கப்படும். செப்டம்பர் 1, 2026 முதல் பூனைகளை உரிமம் பெறாமல் வைத்திருப்பது தவறு. அப்படி வைத்திருப்பவர்களுக்கு, $5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.