புக்கிட் தீமா விரைவுச்சாலையில் (BKE)இரு மோட்டார் சைக்கிள்கள் மான் மீது மோதியதில் மான் உயிரிழப்பு!
செப்டம்பர் 2-ஆம் தேதி அதிகாலையில் புக்கிட் தீமா விரைவுச்சாலையில் (BKE) இடம்பெற்ற விபத்தில் சாம்பார் மான் ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது. அந்த மான் மீது இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதின, ஆனால் ஓட்டுநர்களுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை.
அதிகாலை 1 மணிக்கு இந்தச் சம்பவம் குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக NParks கூறியது. ஆனால், அதிகாரிகள் வருவதற்கு முன்பே அந்த மான் இறந்துவிட்டது. சாலைப் பாதுகாப்பிற்காக அதன் உடல் பின்னர் அகற்றப்பட்டது.
இணையத்தில் பகிரப்பட்ட காணொளி ஒன்றில், சாலையில் அடிபட்டுக் கிடந்த மான் மீது ஒரு மோட்டார் சைக்கிள் மோதியதும், அதைத் தொடர்ந்து மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியதும் பதிவாகியுள்ளது. மூன்றாவது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சமயோசிதமாக மானைத் தவிர்த்துச் சென்றார். பின்னர் மூன்று ஓட்டுநர்களும் தங்களது வாகனங்களை நிறுத்தினர்.
காடுகளுக்கு அருகில் உள்ள பகுதிகளில் வாகனங்களை ஓட்டும்போது கவனமாக இருக்கும்படி NParks ஓட்டுநர்களுக்கு நினைவூட்டியுள்ளது.
வனவிலங்குகள் சாலையைக் கடக்க வாய்ப்புள்ளது. மேலும், அடிபட்ட வனவிலங்குகளைப் பார்த்தால் பொதுமக்கள் அவற்றைத் தொட வேண்டாம் என்றும், உடனடியாக NParks-இன் 24 மணி நேர விலங்கு மீட்பு மையத்தைத் தொடர்புகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சாம்பார் மான், காடுகளில் முற்றிலுமாக அழிந்துபோகும் அபாயத்தில் உள்ள ஒரு விலங்கினம் என்பது குறிப்பிடத்தக்கது.