சிங்கப்பூரில் ஓட்டப் போட்டியின் போது இந்தோனேசிய இளைஞர் மரணம்!
ஏப்ரல் 27 அன்று சிங்கப்பூரில் நடந்த 2XU கம்ப்ரஷன் ஓட்டத்தின் போது மயங்கி விழுந்ததில் இந்தோனேசியரான லியோனார்ட் தர்மவான் என்ற 23 வயது நபர் பரிதாபமாக இறந்தார்.
அவர் ஜூரோங் தீவில் உள்ள சிங்கப்பூர் சுத்திகரிப்பு நிறுவனத்தில் செயல்முறை பொறியாளராகப் பணிபுரிந்து வந்தார். லியோனார்ட் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் படித்து பொறியியல் பட்டம் பெற்றார்.
அரை மராத்தான் போட்டியில் சுமார் 19 கி.மீ தூரம் ஓடிய பிறகு காலை 6.19 மணியளவில் லியோனார்ட் சரிந்து விழுந்தார். முதலில் விழுந்தபோது அவர் சுயநினைவுடன் பேசிக் கொண்டிருந்தார், ஆனால் அவரது உடல்நிலை மோசமடைந்தது.
துணை மருத்துவர்கள் வரும் வரை அருகில் இருந்த ஒருவர் CPR செய்தார். அவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு காலை 8.01 மணிக்கு இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
எந்த அசம்பாவித அறிகுறிகளும் இல்லை என்றும், அவரது மரணத்திற்கான காரணம் இதயம் மற்றும் நுரையீரல் செயலிழப்பு என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர், மேலும் அவரது இறப்புக்கான காரணம் தொடர்ந்து பரிசோதிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
லியோனார்டின் உடல் ஏப்ரல் 29 அன்று ஜகார்த்தாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டது. சிங்கப்பூரில் உள்ள இந்தோனேசிய தூதரகம் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்ததுடன், அவரது குடும்பத்திற்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் தங்கள் இரங்கலைப் பகிர்ந்து கொண்டதோடு, இடம்பெற்றுவரும் விசாரணைக்கு ஒத்துழைப்பதாகவும் தெரிவித்தனர்.