பீகாரில்வரதட்சணையாக மருமகளின் கிட்னியை தானமாக கேட்டு கொடுமைப்படுத்திய மாமியார்!
பீகார் மாநிலம் முசாபர்பூரில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் சமூகத்தில் கவலை ஏற்படுத்தியுள்ளது.
திப்தி என்ற பெண், பைக், பணம் அல்லது நகைகளை வரதட்சணையாக கொண்டு வரவில்லை என்பதால், தனது சிறுநீரகத்தை கணவருக்குத் தானம் செய்யுமாறு அவரது மாமியார் கேட்டதாக கூறியுள்ளார்.
2021ல் திருமணம் செய்த திப்தி, ஆரம்பத்தில் திருமண வாழ்க்கை அமைதியாக இருந்ததாக கூறினார். ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு, மாமியார் குடும்பத்தினர் அவரை மனதளவிலும் உடல் ரீதியிலும் துன்புறுத்த தொடங்கியுள்ளனர்.
சிறுநீரக கோரிக்கையை ஆரம்பத்தில் அவர் ஜோக்காகவே எண்ணினாராம். ஆனால், அந்த கோரிக்கை தொடர்ந்ததும், திப்தி மறுத்ததால், அவர் தாக்கப்பட்டு வீட்டிலிருந்து வெளியே அனுப்பப்பட்டுள்ளார்.
இதற்குப் பிறகு, திப்தி தனது பெற்றோரிடம் திரும்பி, மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் இரு குடும்பங்களையும் சமாதானம் செய்ய முயற்சி செய்தனர், ஆனால் திப்தி விவாகரத்து கோரினார். அவரது கணவர் அதற்கும் ஒத்துக் கொள்ளவில்லை.
இதையடுத்து திப்தியின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருள் நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.