சிங்கப்பூரில் துணிச்சலான செயல் ஓட்டுநரைக் காப்பாற்றிய வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு அதிபர் பாராட்டு!
கடந்த மாதம் தஞ்சோங் கடோங் சவுத் சாலையில் பள்ளத்தில் விழுந்த கார் ஒன்றின் ஓட்டுநரை மீட்ட ஏழு வெளிநாட்டுத் தொழிலாளர்களின் துணிச்சலான செயல் பெரிதும் பாராட்டப்பட்டது.
அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஆகஸ்ட் 3ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) இஸ்தானாவில் நடைபெற்ற தேசிய தின திறந்த இல்ல நிகழ்வுக்கு அவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
அங்கு அவர்கள் அதிபர் தர்மன் சண்முகரத்தினத்தையும் அவரது மனைவியாரையும் சந்தித்தனர். அதிபர் தனது முகநூல் பதிவிலும் அவர்களின் விரைவான, துணிச்சலான செயலுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.
அந்த ஊழியர்களில் ஒருவரான திரு. சுப்பையா, தனக்குக் கிடைத்த இந்த கௌரவம் மகிழ்ச்சியளிப்பதாகவும், அவசர காலங்களில் மற்றவர்களும் உதவ இது ஒரு தூண்டுகோலாக அமையும் என நம்புவதாகவும் தமிழில் கூறினார்.
அவர்கள் வழக்கமாகக் கட்டுமான வேலைகளுக்குக் கொண்டு செல்லும் கயிற்றைப் பயன்படுத்தி, அந்தப் பள்ளத்தில் இருந்து ஓட்டுநரை வெளியே இழுத்தனர். சில முறை இழுத்ததிலேயே ஓட்டுநரை வெற்றிகரமாக மீட்டுவிட்டனர். அந்த ஊழியர்களில் சிலருக்கு இதுவே இஸ்தானாவுக்கு முதல் முறையாகும்.
சிங்கப்பூரில் 26 ஆண்டுகளாக வசிக்கும் திரு. சாத்தபிள்ளை உட்பட அந்தக் குழுவினர், சிங்கப்பூரில் பணிபுரிவது தங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினர். அதிபரைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்ட பிறகு, அவர்கள் மற்ற தேசிய தினக் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டனர்.
அவர்களுடன், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு கடைவீட்டில் ஏற்பட்ட தீ விபத்தின்போது உதவிய மேலும் 11 பேரும் அந்த நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.
Image Mothership