பனிப்பொழிவு காரணமாக நியூயார்க் விமானங்களை ரத்து செய்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்!
சிங்கப்பூர்:அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடும் பனிப்பொழிவு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) நியூயார்க்கு செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் பல விமானங்களை ரத்து செய்துள்ளது.
வெள்ளிக்கிழமை மாலை முதல் சனிக்கிழமை மதியம் வரை அதிக பனி பெய்யலாம் என்று அமெரிக்க வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பயணிகள் பயண திட்டங்களில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
வெள்ளி மற்றும் சனி ஆகிய நாட்களில் சிங்கப்பூர், நியூயார்க் மற்றும் ஃப்ராங்க்பர்ட் இடையே இயக்கப்பட வேண்டிய ஆறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக SIA அறிவித்துள்ளது.
வானிலை நிலைமை தொடர்ந்து மாறக்கூடும் என்பதால், மேலும் சில விமானங்களும் பாதிக்கப்படலாம் என்றும் கூறியுள்ளது. ரத்து செய்யப்பட்ட விமானங்களில் முன்பதிவு செய்துள்ள பயணிகளுக்கு நேரடியாக தகவல் வழங்கப்படும்.
இந்த விமானங்களால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மாற்று விமான ஏற்பாடு அல்லது பயன்படுத்தப்படாத டிக்கெட் தொகைக்கான முழு பணத்தை திரும்பப் பெறும் வசதி வழங்கப்படும்.
நேரடியாக SIA மூலம் டிக்கெட் எடுத்தவர்கள் இணையதளம் வழியாக பணத்தைத் திரும்பப் பெறலாம். பயண முகவர்கள் மூலம் முன்பதிவு செய்தவர்கள் அவர்களையே தொடர்பு கொள்ள வேண்டும்.
இதேபோல், கத்தே பசிபிக் உள்ளிட்ட பிற விமான நிறுவனங்களும் நியூயார்க் செல்லும் விமானங்களுக்கு கட்டண தளர்வுகளை அறிவித்துள்ளன.