ஜப்பானின் ஃபுகுஷிமா பகுதியில் 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!
ஏப்ரல் 4 அன்று, ஜப்பானின் வடகிழக்கு ஃபுகுஷிமா பகுதியில் 6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிர்ஷ்டவசமாக, சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. மேலும், உடனடி சேதம் அல்லது காயங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை.
நிலநடுக்கத்தின் மையம் 40 கிமீ ஆழத்தில் இருந்ததுடன், டோக்கியோவிலும் அதிர்வுகள் உணரப்பட்டன.
ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தை இயக்கும் டெப்கோ நிறுவனம், அந்த நிலையம் அல்லது அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளது.
அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நாடாக ஜப்பான் அறியப்படுகிறது. பலத்த நில அதிர்வுகளைத் தாங்கும் வகையில் அங்கு கடுமையான கட்டிட விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
ஆண்டுக்கு சுமார் 1,500 லேசான நிலநடுக்கங்களை எதிர்கொள்ளும் அந்நாட்டின் 125 மில்லியன் குடியிருப்பாளர்கள், இதுபோன்ற நிகழ்வுகளுக்குப் பழக்கப்பட்டவர்களாக உள்ளனர்.
நேற்று (ஏப்ரல் 3) தைவானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாக இந்த நிலநடுக்கம் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தைவான் நிலநடுக்கத்தில் ஒன்பது உயிர்கள் பலியாகின, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 2011-இல் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் தான் இதுவரை அந்த நாட்டில் மிகவும் பேரழிவை ஏற்படுத்தியது.
அந்த நிலநடுக்கம் சுனாமியையும், ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தில் பேரழிவையும் உருவாக்கியது.