சிங்கப்பூரில் போதைப்பொருள் சோதனை 74 பேர் கைது!

0

சிங்கப்பூர் – அக்டோபர் 13 முதல் 17 வரை ஐந்து நாட்கள் தீவு முழுவதும் நடைபெற்ற போதைப்பொருள் சோதனையின் போது 74 பேர் கைது செய்யப்பட்டனர்.

மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (CNB) அதிகாரிகள் 2.5 கிலோகிராமுக்கும் அதிகமான கஞ்சா உட்பட, கெட்டமின், ஹெராயின், ஐஸ், எக்ஸ்டசி போன்ற பல்வேறு போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு 68,000 டாலர்களுக்கும் மேலாகும். ஆங் மோ கியோ, பாலெஸ்டியர், கிளிமெண்டி, புங்கோல், உட்லண்ட்ஸ், யிஷூன் உள்ளிட்ட பல பகுதிகளில் இச்சோதனை நடத்தப்பட்டது.

கிளிமெண்டி அவென்யூ 1 அருகே 26 வயது ஒரு பெண் கைது செய்யப்பட்டார். போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் அப்பெண்ணுடன் அப்போது அவரது 19 மாதக் குழந்தையும் இருந்தது. CNB அதிகாரிகள் குழந்தையின் பாதுகாப்பை உறுதி செய்தனர்.

சோதனையின் போது, தடைசெய்யப்பட்ட பொருட்கள் இருப்பதாக எண்ணப்படும் பல மின் சிகரெட் கருவிகள் மற்றும் பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

மற்றொரு சம்பவத்தில், யிஷூனில் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த 36 வயதான ஒருவரை CNB அதிகாரிகள் நிறுத்தி, கஞ்சா, கெட்டமின், ஐஸ் உள்ளிட்ட பெருமளவில் போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். CNB விசாரணைகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளது.

500 கிராமுக்கும் அதிகமான கஞ்சாவை கடத்தி சட்டத்திற்குப் புறம்பாக விற்பனை செய்வது மரண தண்டனைக்குரிய குற்றம் என பொதுமக்களுக்கு நினைவூட்டியது.

Leave A Reply

Your email address will not be published.