கட்டுமான பணிகள் இடம் பெற்றுக்கொண்டிருக்கும்பது சுரங்கப்பாதை இடிந்துவிழுந்து விபத்து!
தெலுங்கானா மாநிலத்தின் நாகர்குர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் அணைக்கட்டு பகுதியில், ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. இன்று, தண்ணீர் கொண்டு செல்லும் சுரங்கப்பாதையின் கூரை ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
இதனால், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஆறு தொழிலாளர்கள் உள்ளே சிக்கியுள்ளனர். சம்பவம் நடந்தபோது, பணியாளர்கள் சுரங்கப்பாதையின் 12-13 கி.மீ தூரத்தில் பணியில் இருந்தனர்.
சம்பவத்தை அடுத்து, பல தொழிலாளர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். இருப்பினும், 6 முதல் 8 பேர் வரை உள்ளே சிக்கியிருக்கலாம் என பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாவட்ட ஆட்சியர், காவல்துறை, தீயணைப்புத் துறை மற்றும் பேரிடர் மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளைத் தொடங்கியுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், மீட்பு பணிகளை தீவிரப்படுத்த துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.