வீடு புகுந்து திருட்டு பனங்கிழங்கு வியாபாரி கைது!
தூத்துக்குடி மாவட்டம், சாலிபுத்தூரைச் சேர்ந்தவர் 60 வயது நீல புஷ்பா. இவர் ஜோதிடம் சொல்லி வருகிறார்.
இந்நிலையில், நெல்லை மாவட்டம் இட்டமொழி கிராமத்தில் உள்ள இவரது வீட்டில், பீரோவை உடைத்து ரூ.2 லட்சம் ரொக்கம், மூன்றரை சவரன் தங்க நகைகள் திருடு போயுள்ளன.
இது குறித்து நீல புஷ்பா தட்டார்மடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்படி, போலீசார் விசாரணை நடத்தி கண்காணிப்பு கேமரா பதிவுகளை சோதனை செய்தனர். அதில், பனங்கிழங்கு வாங்கி விற்கும் ஜெயகுமார் என்பவர், நீல புஷ்பா வீட்டுக்கு வந்து சென்றது தெரியவந்தது.
மேலும், அவர் வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்டு, பீரோவை உடைத்து பணம், நகையை திருடிச் சென்றது தெரிய வந்தது. அவரைப் பிடித்து போலீசார் விசாரித்த போது தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல், அந்த வீட்டிலேயே குளித்து விட்டு, சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு, பின்னர் திருட்டில் ஈடுபட்டதாக ஜெயகுமார் போலீஸில் தெரிவித்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட ஜெயக்குமார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரிடமிருந்து திருடப்பட்ட பணம், நகைகள் மீட்கப்பட்டன. வீடுகளைப் பூட்டி வைத்துவிட்டுச் செல்லும் போது, நன்கு பூட்டிச் செல்ல வேண்டும், அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் பாதுகாப்பாக ஒப்படைத்துவிட்டு செல்வது அவசியம்.
இச்சம்பவம், திருட்டுச் சம்பவங்கள் அதிகம் நடைபெறும் பகுதிகளில் உள்ள மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. குற்றச் செயல்களின் பின்விளைவுகளை உணர்த்தும் வகையிலும் இந்த சம்பவம் அமைந்துள்ளது.