துவாஸ் சோதனைச் சாவடியில் காரில் மறைத்துபோதைப்பொருள் கடத்தல்மலேசியர் கைது!
சிங்கப்பூருக்குள் போதைப்பொருள் கடத்த முயன்ற 38 வயது மலேசிய நபர் ஒருவர், கடந்த செப்டம்பர் 20 அன்று துவாஸ் சோதனைச் சாவடியில் கைது செய்யப்பட்டார்.
அவரது காரில் இருந்து ஹெராயின், கஞ்சா மற்றும் ‘ஐஸ்’ போன்ற போதைப்பொருட்களை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
சோதனைச் சாவடியில், மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட அந்த காரை குடிநுழைவு அதிகாரிகள் வழக்கமான சோதனைக்காக நிறுத்தியுள்ளனர். அப்போது, காரின் டிக்கியில் இரண்டு கறுப்புப் பொட்டலங்கள் இருப்பதைக் கண்டு அவர்களுக்குச் சந்தேகம் எழுந்துள்ளது.
உடனடியாக, மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவுக்கு (CNB) தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து நடத்திய தீவிர சோதனையில், காரின் பல பாகங்களில் போதைப்பொருள் பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மொத்தமாக, அதிகாரிகளால் சுமார் 1.9 கிலோ ஹெராயின், 1.65 கிலோ கஞ்சா மற்றும் 268 கிராம் ‘ஐஸ்’ பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் சந்தை மதிப்பு S$272,000-க்கும் (சிங்கப்பூர் டாலர்) அதிகம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருட்கள், சுமார் 1,300 பேருக்கு ஒரு வாரத்திற்குப் போதுமானதாகும் எனக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.