சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இரு பயணிகளுக்கு பெரும் தொகை இழப்பீடு வழங்க உத்தரவு!
ஹைதராபாத் நுகர்வோர் ஆணையம்-3, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஒரு டிஜிபி தம்பதிக்கு ரூபாய் 2,07,500 இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. பழுதான இருக்கையை ஒதுக்கியதாலும், பிசினஸ் வகுப்பு டிக்கெட் இருந்தும் எகனாமி வகுப்பில் உணவு பரிமாறியதாலும் ஏற்பட்ட சிரமத்திற்காக இந்த இழப்பீடு வழங்கப்படுகிறது.
இந்த ஆணையத்தின் தீர்ப்பின்படி, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் டிக்கெட் தொகையான ரூ 97,500-ஐ 12 சதவீத வட்டியுடன் திருப்பித் தர வேண்டும், மேலும் மன உளைச்சலுக்காக ரூ. 10,000 மற்றும் வழக்குச் செலவுகளுக்காக ரூ. 10,000 செலுத்த வேண்டும்.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் மும்பை மற்றும் பெங்களூரு தலைமை நிர்வாக அதிகாரிகளும், இயக்குநர் குழுவும் இந்த முழுத் தொகையையும் 45 நாட்களுக்குள் ரவி குப்தா மற்றும் அஞ்சலி குப்தாவுக்கு வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
புகார்தாரர்களான டிஜிபி ரவி குப்தா மற்றும் அவரது மனைவி அஞ்சலி குப்தா கடந்த ஆண்டு மே 10 ஆம் தேதி சிங்கப்பூர் வழியாக பெர்த் (ஆஸ்திரேலியா) செல்வதற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்தனர்.
மே 23ம் தேதி விமான நிலையத்தை அடைந்தபோது, முன்பதிவு செய்த மின்னணு சாய்வு இருக்கை பழுதடைந்திருந்ததால் அவர்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது. புகார் அளித்தும், மாற்று இருக்கைகள் எதுவும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.
அதிக கட்டணம் செலுத்தி வாங்கிய பிசினஸ் வகுப்பு டிக்கெட்டுகளுக்கான கூடுதல் தொகையைத் திருப்பித் தராமல், 10,000 கிரிஸ்ஃபிளையர் மைல்களை மட்டும் வழங்கியதில் அவர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.