மருத்துவர் நீண்ட நேர வேலையால் நோயாளிகளுக்கு ஆபத்து!
சிங்கப்பூரில் பணிபுரியும் ஒரு மருத்துவர், Reddit தளத்தில் சமீபத்தில் மருத்துவத்துறையில் இருக்கும் நீண்ட வேலை நேரப் பிரச்சனையைப் பகிர்ந்து கொண்டார்.
நோயாளிகளின் பாதுகாப்பை இது பெரிதும் பாதிக்கும் என்று அவருடைய கருத்து. 30 மணி நேரம் வரை ஒரு சில மருத்துவர்கள் தொடர்ந்து பணி செய்வது, காலாவதியான மற்றும் ஆபத்தான ஒரு நடைமுறை என அவர் குறிப்பிடுகிறார்.
பெரும்பாலான மருத்துவர்கள் பகல் முழுவதும் வேலை பார்த்துவிட்டு, இரவு நேரங்களில் அவசர அழைப்பிற்காகக் காத்திருந்து, பின் மறுநாள் மீண்டும் பணிக்குச் செல்ல வேண்டிய அவலம் உள்ளது.
இதனால் அவர்களுக்குத் தொடர்ச்சியான தூக்கமின்மை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இந்த நீண்ட வேலை நேரத்திற்குப் பதிலாக ஷிப்ட் முறையில் அனைத்து மருத்துவர்களையும் பணி செய்ய வைக்கலாம் என அந்த மருத்துவர் ஆலோசனை தருகிறார்.
சில மருத்துவமனைகள் இரவு முழுவதும் பணிபுரிந்த மருத்துவர்களை காலை 8 மணிக்கு வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கின்றன. இது கொஞ்சம் மேம்பட்ட நிலையென்றாலும், இன்னும் பல மாற்றங்கள் தேவை.
நீண்ட நேரம் தூங்காமல் வேலை செய்வது நோயாளிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இதை மாற்ற நடவடிக்கை எடுப்பது அவசியம் என அவர் வலியுறுத்துகிறார்.