எல்லையில் ஏற்பட்ட பதட்டம் காரணமாக 25 விமானப் பாதைகளை மூடியது, 400 விமானங்கள் ரத்து!
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், நேபாள பிரஜையையும் சேர்த்து 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்தக் கொடூர சம்பவத்திற்கு, பாகிஸ்தானை மையமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் கிளையான ‘தி ரெசிஸ்டண்ட் பிரண்ட்’ குழு பொறுப்பு எடுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது நேற்று இரவு துல்லியமான தாக்குதல் நடத்தியது.
இதில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டு, பல பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். இந்த நிலையில், நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு காரணமாக, பாகிஸ்தான் வழியாக செல்லும் 25 விமானப் பாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. அதே நேரத்தில், எல்லையில் நிலவும் பதற்றத்தின் காரணமாக ஸ்ரீநகர், ஜம்மு, லே, சண்டிகர் உள்ளிட்ட 27 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
இதன் விளைவாக, இந்தியா முழுவதும் 400க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன