மாட்ரிட்டிலிருந்து புறப்பட்ட விமானம் பறவை மோதலால்விமானம் அவசரமாக தரை இறங்கியது!
ஆகஸ்ட் 3ஆம் தேதி மாட்ரிட்டிலிருந்து பாரிஸ் நோக்கிப் புறப்பட்ட ஸ்பெயின் நாட்டுப் பயணிகள் விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களிலேயே பறவை மோதியதால் மீண்டும் திரும்பிச் செல்ல நேர்ந்தது. இந்த மோதலால் விமானத்தின் முன்பகுதி கடுமையாகச் சேதமடைந்தது.
விமானத்தில் 182 பயணிகள் இருந்தனர். பறவை மோதிய பிறகு விமானத்தின் முன்பகுதி மோசமாகச் சிதைந்திருந்ததையும், புகை கசியத் தொடங்கியதால் சில பயணிகள் ஆக்ஸிஜன் மாஸ்க்
அணிந்திருந்ததையும் காட்டும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.
ஐபீரியா விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விமானம் புதிய ஏர்பஸ் ரகத்தைச் சேர்ந்தது என்றும், சில வாரங்களுக்கு முன்புதான் பயன்பாட்டுக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளது.
பறவை மோதியதில் விமானத்தின் ஒரு எஞ்சினும் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், விமானிகள் அவசரகால வழிமுறைகளைப் பின்பற்றி, விமானத்தை மாட்ரிட்டிலேயே பத்திரமாகத் தரையிறக்கினர்.