இதய நோய்க்கு சிகிச்சை தொடர அனுமதி வேண்டும் பாகிஸ்தானிய தம்பதியின் வேதனை!
காஷ்மீரின் பஹல்காமில் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகளை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 26 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தொடர்புடையது என மத்திய அரசு குற்றம் சாட்டி, பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்களை நாடு கடத்தல், மற்றும் விசாக்களை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்தச் சூழலில், மருத்துவ விசா தவிர்ந்த மற்ற விசாக்களில் இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் இன்று (இறுதி நாளாக) நாடு விட்டு வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால் இந்தியாவில் சிகிச்சை பெற வந்த பாகிஸ்தானியர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர்.
இந்த நிலையில், டெல்லியில் இதய நோய்க்கு சிகிச்சை பெற்று வரும் தங்களின் 7 மற்றும் 9 வயது குழந்தைகள் சிகிச்சையை தொடர அனுமதி வழங்க வேண்டுமென பாகிஸ்தானைச் சேர்ந்த தம்பதி கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டுள்ளனர். “அடுத்த வாரம் அறுவை சிகிச்சை இருக்கிறது. இதற்காக ரூ.1 கோடி செலவாகிவிட்டது. இரு நாடுகளும் தயவுசெய்து எங்கள் குழந்தைகளின் சிகிச்சையை அனுமதிக்க வேண்டும்,” என்று தந்தை அழுதபடி வேண்டியுள்ளார்.