Whampoa வீடமைப்பு வாரிய குடியிருப்பில் தீ விபத்து ஒருவர் பலி!
மே 6, 2024 அன்று, வம்போவா (Whampoa) குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படைக்கு (SCDF) லோரோங் லிமாவின் 76வது தொகுதியில் காலை 2:30 மணியளவில் தீ விபத்து குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள், தீ பரவிய ஆறாவது மாடியில் உள்ள குடியிருப்பிற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்தனர்.
அருகிலுள்ள வீடுகளில் வசித்த சுமார் 200 பேரை, பாதுகாப்பு நடவடிக்கையாக சிங்கப்பூர் காவல்துறை (SPF) மற்றும் SCDF அதிகாரிகள் வெளியேற்றினர். சென்ட்ரல் மற்றும் பிஷான் தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் இரண்டு நீர் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். தீ, குடியிருப்பு முழுவதையும் சேதப்படுத்தியது.
சமையலறை அருகே உள்ள பகுதியில் இருந்து இருவர் மீட்கப்பட்டு சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் படுக்கையறையில் ஒருவர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
இறந்த நபரின் குடும்ப உறுப்பினர்கள்தான் காயமடைந்த இருவரும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹெங் சீ ஹோவ் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவளிக்க சமூக அமைப்புகள், குடியிருப்பு வளாக மேம்பாட்டு வாரியம் (HDB) மற்றும் நகர மன்றம் ஆகியவை முயற்சித்து வருகின்றன.
தீ விபத்துக்கான காரணம் குறித்து SCDF விசாரணை நடத்தி வருகிறது. இந்த விபத்தில் ஏதேனும் குற்றச்செயல் நடந்ததற்கான அறிகுறிகள் இல்லை என்று SPF தெரிவித்துள்ளது.